
மாடுகளுக்குக் கோமாரி நோய் வந்தால், தினம் ஒரு நாட்டுக்கோழி முட்டை என மூன்று நாள்களுக்குக் கொடுக்க வேண்டும். மேலும், எருக்கன் பாலை, விளக்கெண்ணெயில் கலந்து, மாட்டின் உடம்பில் புள்ளிகள் வைக்க வேண்டும். கோமாரி தாக்கிய மாட்டின் மூக்கணாங்கயிற்றை எடுத்துவிட வேண்டும். 50 மில்லி நல்லெண்ணெயில் நான்கு வாழைப்பழங்களை ஒரு மணிநேரம் ஊற வைத்து, நான்கு நாள்களுக்குக் கொடுத்து வந்தாலும் கோமாரி சரியாகிவிடும். கோமாரி தாக்கிய மாட்டிடம் கன்றைப் பால் குடிக்க விடக் கூடாது.
மாடுகள் தீவனம் எடுக்காமல் இருந்தால், கல்யாண முருங்கை இலை, வெற்றிலை ஆகியவற்றோடு வெல்லம் கலந்து கொடுக்கலாம். மூங்கில் இலையை உண்ணக்கொடுத்தால் மாடுகளின் வயிறு சுத்தமாகும்.
மாடுகளுக்கு உப்புசம் ஏற்பட்டால் 100 கிராம் பழைய புளி, இரண்டு எள் செடி ஆகியவற்றைத் தண்ணீரில் ஊறவைத்துக்கொடுத்தால் சரியாகிவிடும். கழிச்சல் இருந்தால் 2 கிலோ கொய்யா இலை, மலராத தென்னம்பாளை இரண்டையும் நான்கு லிட்டர் தண்ணீரில் போட்டுக் கொதிக்க வைத்து, இரண்டு லிட்டராகச் சுண்ட வைத்துக் கஷாயமாகக் கொடுத்தால் சரியாகிவிடும். புண்களுக்கு வேப்பெண்ணெய் தடவினாலே சரியாகிவிடும்.