மீன் பண்ணை
மீன் பண்ணை அமைப்பதற்கு இடம் தேர்வு செய்யும்போது பல்வேறு காரணிகளைக் கருத்தில் கொள்ள வேண்டும். இதனால் அதிக இடர்பாடுகளின்றி அதிக செலவில்லாமல் தரமான மீன் வளர்ப்புக் குளங்களை அமைத்துக்கொள்ளலாம். மீன் பண்ணை அமைப்பதற்கான இடங்களை தேர்வு செய்யும் போது கீழ்க்காணும் குறிப்புக்களை கவனத்தில் கொள்வது நல்லது:

- குளம் அமைக்கத் தகுதியான இடம். பாறைகள் இல்லாமல் அதிக மேடு பள்ளங்கள் மற்றும் தாவரங்களின்றி சமமான சிறிதளவு சாய்தளத்தோடு இருத்தல் நல்லது. மண்ணின் கார அமிலத்தன்மை (PH) 6.5 முதல் 9.00 வரை இருக்கும் நிலங்கள் கெண்டை மீன் வளர்ப்பிற்கு ஏற்றவை
- குளம் அமைக்கத் தகுதியான இடம் நீரைத் தேக்கி வைக்கும் தன்மை கொண்டதாக இருக்க வேண்டும். களி, வண்டல் மற்றும் மணல் கலந்த மண் வகை கொண்ட நிலம், மீன் பண்ணை அமைக்கச் சிறந்தது. களியின் அளவு மிகக்குறைவாக உள்ள நிலங்களில், நீர்க்கசிவு மூலம் நீர் இழப்பு அதிக அளவு ஏற்படும். எனவே சுமார் 30 முதல் 40 சதம் களித்தன்மையுடைய நிலம் மீன் பண்ணைகள் அமைக்க ஏற்றது. எனவே தாழ்வான நிலப்பகுதியில் நீர் தேங்கும் நிலங்கள், களர் நிலம், களர் மற்றும் உவர் மண் தன்மை கொண்ட நிலங்களையும் கெண்டை மீன் வளர்ப்பிற்கு பயன்படுத்தலாம்
- மீன் வளர்ப்பிற்குத் தேவையான நீர் ஆதாரங்களான ஆறுகள், குளங்கள் மற்றும் நல்ல தரமான நிலத்தடி நீர்வளம் கொண்ட பகுதிகள் மீன் வளர்ப்பிற்கு ஏற்றவை. மீன் பண்ணைக்கான நீர் ஆதாரம் ஏரி, குளம், மற்றும் ஆறு போன்றவைகளாக இருப்பின் குறைந்த பட்சம் அவற்றிலிருந்து 6 மாத காலத்திற்கு நீர் கிடைக்குமாறு இருத்தல் நல்லது.
- நீரை வடிப்பிற்குத் தேவையான வடிகால் வசதிகளும் சாலை வசதிகள் தொடர்பு கொண்ட இடமாகவும் இருந்திடல் வேண்டும்
மேலே குறிப்பிடப்பட்ட தகுதிகள் கொண்ட இடமாயிருப்பின், அவற்றில் அதிகச் செலவின்றி மீன் பண்ணைகள் அமைத்து இலாபம் பெற்றிடலாம். குறிப்பிடப்பட்ட தகுதிகளில் ஏதேனும் குறைந்திருப்பின் சற்றுக்கூடுதல் செலவுகள் செய்து அத்தகைய இடங்களிலும் மீன் பண்ணை அமைக்கலாம்.
ஒரு மீன் வளர்ப்புக் குளத்தைக் குறைந்தது ¼ ஏக்கர் (1000 ச.மீ) பரப்பிலாவது அமைத்தால், இலாபகரமாக மீன் வளர்ப்பை மேற்கொள்ளலாம். மீன் வளர்ப்புக் குளங்களைச் செவ்வக வடிவத்தில் சுமார் 1 ஏக்கர் முதல் 2.5 ஏக்கர் (1 எக்டர்) கொண்டவைகளாக அமைத்துக் கொள்ளலாம். குளங்களைச் சதுர வடிவில் அமைக்கும் போது அமைக்க வேண்டிய கரையின் நீளம் குறைகிறது. இருப்பினும், மீன்களை எளிதாக அறுவடை செய்வதற்கு செவ்வக வடிவ குளங்களே ஏற்றவை. தற்போது தண்ணீர் பற்றாக்குறை அதிகரிப்பதால் குளங்களை ¼ முதல் 1 ஏக்கர் பரப்பளவு கொண்டவைகளாகவும் அமைத்துக் கொள்ளலாம்.
பெரும்பாலான மீன் வளர்ப்புக் குளங்கள் தோண்டி கரை அமைக்கப்பட்ட குளங்களாகவே உள்ளன. இத்தகைய குளங்கள் அமைத்திட குறைவான செலவே ஆகிறது. ஒரு இடத்தைக் குறியிட்டு அதில் ஓரளவிற்கு மண்ணைத் தோண்டி எடுத்து, பின்னர் தோண்டி எடுத்த மண்ணைக் கொண்டே குளங்களுக்குக் கரை அமைத்திடலாம். இம்முறையில் ஒரு ஏக்கர் குளம் அமைத்திட சுமார் ரூ. 30,000 முதல் ரூ. 40,000 வரை செலவாகிறது. இத்தகையக் குளங்களின் பயன் என்னவெனில் பிற்காலத்தில் மீன் வளர்ப்புத் தொழிலைத் தற்காலிகமாக மாற்ற நினைத்தால் கரை மண்ணை குளத்தினுள் நிரப்புவதன் மூலம் விவசாய நிலமாக மாற்றிவடலாம். வயல்களில் அமைக்கப்படும் மீன்வளர்ப்புக் குளங்கள் பெரும்பாலும் இந்த வகையினைச் சார்ந்ததே.
மீன் வளர்ப்புக் குளங்கள் அமைக்கும் போது கரை அமைக்கத் தேவையான அளவிற்குக் குளத்திலிருந்து மண் எடுத்து அதனை சுற்றுப்புறக் கரை அமைக்கப் பயன்படுத்த வேண்டும். குளங்களின் கரைகளை அமைக்கும் போது நீர் உள்(வரத்து) மடை மற்றும் நீர் (வெளியேற்ற) வடிமடை போன்ற அமைப்புக்கள் அமைப்பது நல்லது. பெரும்பாலும் ஆழ்குழாய் கிணறு வகை கொண்ட பண்ணைகளில் நிலத்தடி நீர் குழாய் மூலமே பாய்ச்சப்படுகிறது. அதனால் அத்தகைய சூழல்களில் உள்வரத்துக் குழாய்களுக்கு தடுப்பு வலைகள் தேவையில்லை. ஆயினும் குளம், ஆறுகள், கால்வாய், போன்ற வெளிநீர் நிலைகளிலிருந்து நீர் எடுத்து மீன்வளர்ப்புக் குளங்களுக்குப் பாய்ச்சும் போது உள்வரத்துக் குழாய்களிலும் கண்டிப்பாக தடுப்பு வலைகள் வைக்க வேண்டும். இது தவிர அனைத்து குளங்களிலும் வடிமடை குழாய்களுக்கு தடுப்பு வலைகள் அத்தியாவிசியமான ஒன்றாகும். குளம் அமைக்கும் போது குளத்தின் அடித்தளத்தை மேடு பள்ளமின்றி வடிமடைப்பகுதியை நோக்கி சிறிதளவு சரிவுடன் (1:300 என்ற விகிதாச்சரத்தில்) அமைத்தல் வேண்டும். இதனால் தேவையான போது குளத்துநீரை வடிப்பது எளிதாகும். அதுமட்டுமின்றி குளங்களின் அடிமட்டத்தில் சேரும் கழிவுகளும் குளம் முழுவதும் பரவாமல் வடிமடை பகுதியிலேயே அதிகமாக சேரும்.
குளத்தின் கரை அமைக்கும் போது கரையின் உயரத்தை குளத்தில் தேக்க இருக்கும்அதிகபட்ச நீர் மட்டத்தை விட குறைந்த பட்சம் 1½ அடி உயரம் அதிகமாக இருக்குமாறு அமைத்திட வேண்டும். குளம் வெட்டும் போது கரையின் பக்கச்சரிவுகளை மண்ணின் தன்மைக்கேற்ப கரையின் உயரம் மற்றும் சாய்தளத்தின் அடிப்பகுதியின் அகலம் 1: 1½ அல்லது 1:2 என்ற விகிதத்தில் இருத்தல் வேண்டும். தேவையான அளவுக்குக் களித்தன்மை கொண்ட நிலங்களில் 1: 1½ என்ற விகிதம் போதுமானது. கரையின் வெளிப் பக்கச் சரிவினை மண்ணின் தன்மைக்கேற்ப 1:1 அல்லது 1: 1½ என்ற விகிதத்தில் அமைத்துக் கொள்ளலாம். குளத்தின் ஆழம் 6 முதல் 8 அடி அளவிற்கு இருப்பது நல்லது.
கரையின் மேற்பகுதியின் அகலம் 4 முதல் 6 அடி என்ற அளவில் இருப்பது நல்லது. பண்ணையின் சுற்றுப்புறக் கரை வாகனங்கள் செல்வதற்கு வசதியாக, கூடுதல் அகலத்துடன் அமைக்கப்படுதல் வேண்டும். குளங்கள் அமைப்பதற்கு வேலையாட்களை பயன்படுத்துவதை விட இயந்திரங்களை பயன்படுத்தும்போது செலவுகள் குறையும்.
சற்று அதிக பரப்பளவில் மீன் பண்ணைகளை அமைக்கும் போது மீன் வளர்ப்புக்குளம் அதாவது இருப்புக்குளம் மட்டுமின்றி நுண்மீன் குஞ்சு வளர்ப்புக் குளம் மற்றும் இளம்மீன் குஞ்சுகள் வளர்ப்புக் குளம் போன்றவற்றையும் பண்ணைகளில் அமைத்துக் கொள்ளலாம், இத்தகைய குளங்களை 0.1 ஏக்கர் பரப்பளவு முதல் 0.25 ஏக்கர் பரப்பளவு கொண்டவைகளாகவும் 5 முதல் 6 அடி ஆழம் கொண்டவையாகவும் அமைத்துக் கொள்ளலாம். இத்தகைய குளங்கள் நமது பண்ணைக்குத் தேவையான மீன் குஞ்சுகளை குறைந்த செலவில் தட்டுப்பாடின்றி நமது பண்ணையிலேயே வளர்க்கவும். விற்பனை எடையை அடையாத நிலையிலுள்ள மீதமான மீன்களை பராமரிக்கவும் உதவும்.
நன்னீர் மீன் வளர்ப்புக் குளங்களைத் தயார் செய்தல்
மீன்களைக் குளங்களில் இருப்புச் செய்வதற்கு முன் குளங்களை முறைப்படித் தயாரிப்பது, மீன் வளர்ப்பில் இன்றியமையாத ஒரு அடிப்படைப் பணியாகும். மீன் வளர்ப்புக் குளங்களில் அதிக உற்பத்தியைப் பெறுவதற்குப் பண்ணை மேலாண்மை எந்த அளவுக்கு முக்கியமோ அந்த அளவிற்குக் குளங்களை முறையாகத் தயார் செய்தலும் முக்கியமாகும். மீன்வளர்ப்புக் குளங்களின் தயாரிப்பில் முக்கிய நிலைகள் பின்வருமாறு.
- குளங்களைக் காயவிடுதல்
- வண்டல் பொறுக்குகளை அகற்றுதல்
- உழவு செய்தல்
- சுண்ணாம்பு இடுதல்
- சாண மற்றும் இரசாயன உரமிடுதல்
- மீன் குஞ்சுகளை இருப்புச் செய்தல்
இப்பொழுது மீன் வளர்ப்புக் குளங்களைத் தயாரிப்பது குறித்து விபரமாகப் பார்க்கலாம்.
1. குளங்களைக் காயவிடுதல்:
குளங்களில் மீன்களை அறுவடை செய்த பின்பு நீரை முழுமையாக வடித்துிவட்டு குளங்களின் அடிப்பகுதியில் வெடிப்புகள் உண்டாகும் அளவிற்கு குளங்களை வெயிலில் நன்றாகக் காயவிட வேண்டும். இதனால், குளங்களின் அடிப்பகுதியிலுள்ள அங்ககக் கழிவுகள் மற்றும் சேற்றிலுள்ள நச்சுயிரினங்கள், போன்றவை அழிக்கப்படுவதோடு, அடிப்பகுதியிலுள்ள நச்சு வாயுக்களும் வெளியேறுகின்றன. குளத்தை வடித்த நிலையில் கரிய நிறத்துடனும் துர் வாடையுடனும் காணப்படும் அடிப்பகுதி காய்ந்த பிறகு அங்குள்ள நச்சுத்தன்மை குறைவதால், நிறம் மாறி துர்வாடையின்றி இருக்கும். குளங்களை வருடம் ஒருமுறை நன்கு காயவிடுவதால், குளங்களின் உற்பத்தித் திறனைச் சிறப்பாகப் பராமரிக்கலாம்.
2. வண்டல் பொறுக்குகளை அகற்றுதல்:
குளங்களின் அடிப்பகுதியில் அதிகமான அளவிற்கு உரச்சத்துக்கள் இருப்பது குளங்களில் அதிக அளவில் பாசிபடர்வுகள் தோன்றி நீர் மாசுபடுவதற்கும் அடிப்பகுதியில் நச்சுத்தன்மை ஏற்படுவதற்கும் காரணமாக அமையும். எனவே குளங்கள் நன்றாக காய்ந்த பிறகு வண்டல் கலந்த மேல் மண்ணை அகற்றி அப்புறப்படுத்த வேண்டும்.
3. உழவு செய்தல்:
குளத்தயாரிப்பில் அடுத்த கட்டமாக குளங்களை நன்றாக உழுதல் வேண்டும். சுமார் 10 முதல் 15 செ.மீ ஆழம் வரை உழுவதால் அடிமட்ட மண் மேலே வருகிறது. இதனால் குளத்தரையின் கீழ் சேர்ந்துள்ள கழிவுகள் வெளிப்படுத்தப்பட்டு அவற்றிலுள்ள நச்சுயிரிகள் அழிக்கப்படுவதோடு நச்சு வாயுக்களும் வெளியேறுகின்றன. எனவே குளங்களை வருடம் ஒரு முறை நன்கு காயவிட்டு உழுவு செய்வதால் குளத்திலுள்ள மண்ணில் நல்ல காற்றோட்டம் ஏற்பட்டுத் தூய்மையடைகிறது.
4. சுண்ணாம்பு இடுதல்:
குளங்களுக்கு சுண்ணாம்பு இடுவுது பல்வேறு நல்விளைவுகளை ஏற்படுத்துகிறது. நீருக்கு போதுமான கார மற்றும் கடினத்தன்மைகளை அளித்தல் நச்சுயிரிகளை அழித்தல் குளத்தின் அடிப்பகுதியில் ஏற்படும் நச்சுத்தன்மைகளை குறைத்தல் நீருக்கு ஓரளவு நிலையான கார அமிலத்தன்மையை அளித்தல் மற்றும் நீரில் கலங்கல் தன்மையையும் பாசிப் படர்வுகளையும் குறைத்து நீரில் ஒளி ஊடுருவும் ஆழத்தை அதிகரித்து அதிக அளவில் உயிர்வளி உற்பத்தி ஏற்படுதல் போன்றவை சுண்ணாம்பு இடுவதன் மூலம் ஏற்படும் நன்மைகளாகும். மீன் வளர்ப்புக் குளங்களுக்கு இட வேண்டிய சுண்ணாம்பின் அளவு மண்ணின் கார அமிலநிலை மற்றும் குளங்களில் சேரும் கழிவுகளின் அளவிற்கேற்ப மாறுபடுகிறது. மிதமான கார மற்றும் அமிலத்தன்மை கொண்ட மண்ணிற்கு ஏக்கருக்கு 80 முதல் 120 கிலோ கிராம் சுண்ணாம்பு பரிந்துரைக்கப்படுகிறது. உழவு செய்தபின் குளங்களில் பரவலாக சுண்ணாம்பை தூவி விட வேண்டும். குளத்தின் பள்ளமான பகுதிகளிலும் வண்டல் கழிவுகள் அதிகம் சேரும் இடங்களிலும் அதிக அளவில் சுண்ணாம்பு இட வேண்டும்.
5. சாணம் கரைத்தல்:
குளங்களுக்குச் சுண்ணாம்பு இட்ட, ஒரு வாரத்திற்குப் பிறகு சுமார் 1 அடி வரை நீர் நிறைத்து, பின்னர் குளத்திற்கு அடியுரமாகச் சாணம் அல்லது கோழி எரு இடலாம். ஒரு எக்டர் பரப்பளவு கொண்ட குளத்திற்கு வருடத்திற்கு சுமார் 12 முதல் 15 டன்கள் வரை சாணமோ அல்லது 5 டன்கள் என்ற அளவில் கோழி எருவோ இட வேண்டும். சாணத்தைப் பொறுத்த மட்டில் உலர்ந்த சாணத்தைவிட மட்கிய அல்லது ஈரமான சாணம் மேலானது. கோழி எருவைப் பொறுத்த மட்டில் மக்கிய ஆழ்கூள எரு (Deep Litter) நல்லது. மொத்தப் பரிந்துரையில் 6ல் ஒரு பங்கை அடியுரமாக நீரில் நன்கு கரைக்க வேண்டும். மொத்த அளவில் ஆறில் ஒரு பங்கை அடியுரமாக இட்ட பின் மீதத்தை வளர்ப்புக் காலத்தில் குளங்களுக்கு பகிர்ந்து மேலுரமாக இடலாம்.
6. இரசாயன உரம் இடுதல்:
சாணம் கரைத்த பின்பு சுமார் பத்து நாட்கள் சென்றதும் நீர் மட்டத்தை சுமார் 1மீட்டர் அளவிற்கு உயர்த்த வேண்டும். பின்னர் அடியுரமாக பரிந்துரை செய்யப்பட்ட இரசாயன உரங்களைக் கரைக்க வேண்டும். ஒரு எக்டர் குளத்திற்கு வருடத்திற்கு 200 கிலோ யூரியா, 250 கிலோ சூப்பர் பாஸ்பேட் மற்றும் 40 கிலோ பொட்டாஷ் என்ற அளவில் இரசாயன உரங்கள் பரிந்துரை செய்யப்படுகின்றன. பரிந்துரை செய்யப்பட்ட உரத்தில் ஆறில் ஒரு பகுதியை நீரில் கரைத்து குளம் முழுவதும் பரவலாக நன்கு தெளிக்க வேண்டும். மீதத்தை மாதாமாதம் (அல்லது) 15 நாட்களுக்கு ஒரு முறை பிரித்துக் குளத்திற்கு இட வேண்டும். நிலம் களர் மண்ணாக இருப்பின் யூரியாவிற்கு பதிலாக அதே அளவு தழைச்சத்து அளிக்கக்கூடிய அளவிற்கு அமோனியம் சல்பேட் உரம் இடுவது நல்லது.
இவ்வாறு முறையாக நன்கு தயார் செய்யப்பட்ட குளத்தில் இரசாயன உரமிட்ட சுமார் 7 நாட்களில் தாவர நுண்ணுயிர் மிதவைகளும், விலங்கு நுண்ணுயிர் மிதவைகளும் தோன்றி நீரின் நிறம் பழுப்பு கலந்த பச்சை நிறமாகக் காட்சியளிக்கும். இந்நிலை மீன்குஞ்சுகளை இருப்புச் செய்வதற்கு மிகவும் உகந்ததாகும்.
களை மீன்கள் மற்றும் பகை மீன்கள் இருக்கின்ற குளங்களில் வளர்ப்பு மீன் குஞ்சுகளை இருப்புச் செய்வதற்கு முன்பு களை மீன்கள் மற்றும் பகை மீன்களை அழித்துவிட வேண்டும். இல்லையெனில், களை மீன்களால் வளர்ப்பு மீன்களின் வளர்ச்சி பாதிக்கப்படுவதோடு பகை மீன்கள் ஏற்படுத்தும் இழப்பால் வளர்ப்பு மீன்களின் எண்ணிக்கையும் குறைந்துவிடும். எனவே களை மற்றும் பகை மீன்களை அழிப்பதற்கு குளத்தில் பலமுறை இழுவலை கொண்டு இழுத்து இத்தகைய தேவயைற்ற மீன்களைப் பிடித்து அழிக்க வேண்டும். களை அல்லது பகை மீன்களைப் பிடித்து அழிப்பதுசாத்தியமில்லாத சூழ்நிலைகளில் மீன் கொல்லிகளைப் பயன்படுத்தலாம். இதற்கென இலுப்பைப் புண்ணாக்கு பிளீச்சிங் பவுடர் மற்றும் குறிப்பிட்ட சில பூச்சிக்கொல்லிகள் பரவலாக பயன்படுத்தப்படுகின்றன. மீன் கொல்லிகளைப் பயன்படுத்தும் போது அவற்றை குளங்களுக்கு சாணமிடுவதற்கு முன்னரே போட வேண்டும். பூச்சிக்கொல்லியின் விஷத்தன்மை சுமார் இரண்டு அல்லது மூன்று வார காலம் நீரில் இருக்கும். எனவே குளத்தில் மீன்கொல்லிகளின் நச்சுத்தன்மை முழுமையாக நீங்கிய பின்னரே மீன் குஞ்சுகளை இருப்புச் செய்தல் வேண்டும்.
மீன் குஞ்சுகளை இருப்புச் செய்தல்
குளங்களில் மீன் குஞ்சுகளை இருப்புச் செய்வதற்கு முன்னர் நாம் திட்டமிட்டு இருக்கக்கூடிய வளர்ப்பு காலம், குளங்களுக்கு நீர் கிடைக்கும் காலத்தின் அளவு தீவனத்தின் தன்மை மற்றும் எதிர்பார்க்கும் அறுவடை எடை போன்றவற்றை கருத்தில் கொள்ள வேண்டும். வளர்ப்புக் காலம் சுமார் 10 மாதங்கள் என்று வைத்துக்கொண்டால் நாம் இடும் உரம் மேலுணவு இவற்றைக் கருத்தில் கொண்டு, ஒரு எக்டர்க்கு 5,000 முதல் 10,000 வரை விரலளவு வளர்ந்த குஞ்சுகள் என்ற அளவில் இருப்புச் செய்யலாம். மீன்குஞ்சுகளைப் பொறுத்தமட்டில் குறைந்தபட்சம் 3 - 4 அங்குல நீளும் வளர்ந்தவையாக இருத்தல் நல்லது. தவிர சுமார் 6 மாத காலம் முதல் ஓராண்டு வயதான வளர்ச்சி கட்டுப்படுத்தப்பட்ட குஞ்சுகளை எக்டருக்கு 5000 – 6000 குஞ்சுகள் இருப்புச் செய்யலாம். வளர்ப்புக் குளத்தில் அதிக காலம் பராமரிக்கப்பட்ட மீன்கள் இருப்புக் குளங்களில் இருப்புச் செய்யப்படும்போதே சுமார் 15 முதல் 20 செ.மீ நீளத்தையும் சுமார் 50 டுதல் 100 கிராம் எடையையும் அடைந்துவிடும். இத்தகைய வளர்ந்த குஞ்சுகள் சுமார் 3 முதல் 5 மாதங்களில் சராசரியாக ½ கிலோ எடைக்கும் அதிகமாக வளரும். எனவே நன்கு வளர்ந்த மீன் குஞ்சுகளைக் குளங்களில் இருப்புச் செய்யும்போது அவற்றை சுமார் 6 மாதங்களிலேயே அறுவடை செய்துவிடலாம். எனவே மீன் வளர்ப்பிற்குத் தேவையான நீர் கிடைக்கும் கால அளவு விற்பனைக்கான வாய்ப்புகள் போன்றவற்றைக் கருத்தில் கொண்டு வளர்ப்புக் காலத்தை நிர்ணயிக்க் வேண்டும். மீன்களின் வளர்ப்புக்காலம் மற்றும் நாம் குளங்களுக்கு இடும் உரம் மற்றும் மேலுணவு இவற்றைக் கருத்தில் கொண்டு குஞ்சுகளின் இருப்படர்த்தியை நிர்ணயிக்க வேண்டும்.
சாதா கெண்டை குஞ்சுகளை அடைப்பு வலைக்குள் இருப்புச்செய்தல்
குளங்களில் பல இன மீன்களை இருப்புச் செய்யும் போது இன விகிதாச்சாரம் முக்கியமான ஒன்றாகும். பொதுவாக கெண்டை மீன்களை இருப்புச் செய்யும்போது தாவர மற்றும் மக்கிய கழிவுகளை உண்ணும் மீன் இனங்களான வெள்ளிக்கெண்டை ரோகு, மிர்கால், மற்றும் சாதாக்கெண்டை போன்ற இனங்களை அதிக அளவில் இருப்புச் செய்தல் வேண்டும். புல் மற்றும் நீர்த்தாவரங்கள் நிறைந்துள்ள குளங்கள் மற்றும் புல் அல்லது காய்கறிக் கழிவு போன்றவற்றை கொடுக்க வாய்ப்புள்ள இடங்களில்புல் கெண்டையைச் சுமார் 5 விழுக்காடு இருப்புச் செய்யலாம். சில மாதிரி இருப்பு விகிதாச்சாரங்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளதைக் காண்க.
மீனினங்கள்
|
மீன் இன எண்ணிக்கை
| |||
மூன்று
|
நான்கு
|
ஐந்து
|
ஆறு
| |
கட்லா
|
30
|
25
|
25
|
10
|
ரோகு
|
40
|
40
|
30
|
30
|
மிர்கால்
|
30
|
30
|
20
|
20
|
வெள்ளிக்கெண்டை
|
-
|
-
|
-
|
25
|
சாதாக்கெண்டை
|
-
|
-
|
20
|
10
|
புல்கெண்டை
|
-
|
5
|
5
|
5
|
மேலே கொடுக்கப்பட்டுள்ள மாதிரிகள் அனைத்து நீர் நிலைகளுக்கும் ஏற்றவை எனக் கூற இயலாது. ஏனெனில் மீன்களின் வளர்ச்சியை நிர்ணயிப்பதில் குளத்தில் இயற்கையிலேயே உற்பத்தியாகும் பல்வேறு நுண்ணுயிர்த் தாவர இனங்களும் பாசி இனங்களும் மற்றும் விலங்கின நுண்ணுயிர் மிதவை இனங்களும் பெரும்பங்கு வகிக்கின்றன. இத்தகைய இயற்கை உயிரினங்களின் உற்பத்தி மண்ணிலுள்ள உரச்சத்து, அதன் கார அமிலத்தன்மை மற்றும் தண்ணீரின் தன்மைகள் போன்ற பல்வேறு காரணிகளைப் பொறுத்து அமைகிறது. எனவே நமது குளத்தில் நமது சொந்த அனுபவங்களைக் கூட்டு மீன் வளர்ப்பில் அதிக உற்பத்தி பெற வெள்ளிக்கெண்டை இனத்தை இருப்புச் செய்வது இன்றியமையாதது. ஆனால் நடைமுறையி் வெள்ளிக்கெண்டை இனத்திற்கு குறைந்த விற்பனை விலையே கிடைப்பதால் அம்மீன் இனம் இருப்புச் செய்யப்படுவதில்லை.
மீன் குஞ்சுகளை வாங்கும்போது நல்ல தரமான குஞ்சுகளைப் பார்த்து வாங்குதல் வேண்டும். உடல் ஊனம் வெளிப்புற காயங்கள் செதில்கள் இழந்து இருத்தல் சுறுசுறுப்பின்மை மெலிந்த நிலை ஒட்டுண்ணிகள் இருத்தல் போன்ற அறிகுறிகளுடன் காணப்படும் மீன் குஞ்சுகளை தவிர்க்க வேண்டும். மீன் குஞ்சுகளை மிதமான வெப்பம் நிலவும் காலை, மாலை மற்றும் முன் இரவு வேலைகளில் இருப்புச் செய்வது நல்லது.
வெளிப்பண்ணைகளிலிருந்து வாங்கிச் செல்லும் குஞ்சுகளை உடனே குளங்களில் விட்டுவிடாமல் முதலில் அவற்றை நமது நீர்நிலையில் சுழலுக்கு இணங்கச் செய்தல் வேண்டும் பின்னர் குஞ்சுகளை 0.05 விழுக்காடு பொட்டாசியம் பர்மாங்கனேட் கரைசலிலோ 2 முதல் 3 விழுக்காடு உப்புக்கரைசலிலோ 2 முதல் 5 நிமிடக் குளியல் சிகிச்சை அளித்து பின்னர் அவற்றைக் குளங்களில் இருப்புச் செய்தல் வேண்டும்.
அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்
1) மீன்குளம் அமைப்பது பற்றிக் கூறவும்?
ஒரு மீன் வளர்ப்புக் குளத்தைக் குறைந்தது ¼ ஏக்கர் (1000 ச.மீ) பரப்பிலாவது அமைத்தால், இலாபகரமாக மீன் வளர்ப்பை மேற்கொள்ளலாம். மீன் வளர்ப்புக் குளங்களைச் செவ்வக வடிவத்தில் சுமார் 1 ஏக்கர் முதல் 2.5 ஏக்கர் (1 எக்டர்) கொண்டவைகளாக அமைத்துக் கொள்ளலாம். குளங்களைச் சதுர வடிவில் அமைக்கும் போது அமைக்க வேண்டிய கரையின் நீளம் குறைகிறது. இருப்பினும், மீன்களை எளிதாக அறுவடை செய்வதற்கு செவ்வக வடிவ குளங்களே ஏற்றவை. தற்போது தண்ணீர் பற்றாக்குறை அதிகரிப்பதால் குளங்களை ¼ முதல் 1 ஏக்கர் பரப்பளவு கொண்டவைகளாகவும் அமைத்துக் கொள்ளலாம்.
2) குளங்களை ஏன் காயவைக்க வேண்டும்?
இதனால், குளங்களின் அடிப்பகுதியிலுள்ள அங்ககக் கழிவுகள் மற்றும் சேற்றிலுள்ள நச்சுயிரினங்கள், போன்றவை அழிக்கப்படுவதோடு, அடிப்பகுதியிலுள்ள நச்சு வாயுக்களும் வெளியேறுகின்றன. குளத்தை வடித்த நிலையில் கரிய நிறத்துடனும் துர் வாடையுடனும் காணப்படும் அடிப்பகுதி காய்ந்த பிறகு அங்குள்ள நச்சுத்தன்மை குறைவதால், நிறம் மாறி துர்வாடையின்றி இருக்கும். குளங்களை வருடம் ஒருமுறை நன்கு காயவிடுவதால், குளங்களின் உற்பத்தித் திறனைச் சிறப்பாகப் பராமரிக்கலாம்.
3) ஒரு எக்டர்க்கு எத்தனை மீன் குஞ்சுகளை இருப்புச் செய்யலாம்?
ஒரு எக்டர்க்கு 5,000 முதல் 10,000 வரை விரலளவு வளர்ந்த குஞ்சுகள் என்ற அளவில் இருப்புச் செய்யலாம். மீன்குஞ்சுகளைப் பொறுத்தமட்டில் குறைந்தபட்சம் 3 - 4 அங்குல நீளும் வளர்ந்தவையாக இருத்தல் நல்லது.
4) மீன்களை எத்தனை முறை அறுவடை செய்யலாம்?
பொதுவாக தற்போது கடைப்பிடிக்கப்படும் வளர்ப்பு முறைகளில் குளங்களில் விடப்படும் மீன்கள் அனைத்தும் ஒரே எடையுடன் சீரான வளர்ச்சியை பெறுவதில்லை. எனவே மீன்களை ஒட்டுமொத்தமாக அறுவடை செய்வதைவிட அவ்வப்போது வளர்ந்த மீன்களை பகுதி பகுதியாக அறுவடை செய்வது நல்லது. வளர்ந்த மீன்களை அவ்வப்போது அறுவடை செய்வதன் மூலம் குளத்திலுள்ள மீத மீன்களின் வளர்ச்சியை ஊக்குவிக்கலாம். நமது பகுதியில் விற்பனைக்கு உகந்த எடையை மீன்கள் அடையும் போது மீன்களை அறுவடை செய்யலாம். விரால்களை இருப்புச் செய்து வளர்க்கும் பண்ணைகளில், சாதாரணமாக ஆறு மாதங்களுக்கு மேல், இரண்டு வாரங்களுக்கு ஒரு முறை அறுவடை செய்யலாம்.
5) குளங்களில் பிராணவாயு பற்றாக்குறையை எவ்வாறு சமாளிப்பது?
பிராணவாயு பற்றாக்குறைவு ஏற்பட்டால் மீன்கள் அனைத்தும் மேல்மட்டத்திற்கு வந்து சுவாசித்துக் கொண்டு இருக்கும். இத்தகைய நிலை கோடையில் அதிகாலை வேளைகளில் ஏற்படும். இதனை சீர்செய்ய குளத்தில் நீர்மட்டத்தின் ஆழத்தை 41/2 முதல் 5 அடியாக அதிகரிக்கலாம். ஓரளவு அடிமட்ட நீரை வெளியேற்றி விட்டு புதுநீர் பாய்ச்சலாம். மீன்களை கொஞ்சம் அறுவடை செய்து அவற்றின் அடர்த்தியைக் குறைக்கலாம்.
மீன்களின் இருப்படர்த்தியை கட்டுப்படுத்துதல், நீரின் ஆழத்தை உகந்த நிலையில் பராமரித்தல் மற்றும் அடிமட்ட நீரை ஓரளவு வெளியேற்றி புதுநீர் பாய்ச்சுதல் போன்ற நடவடிக்கைகளை தொடர்ச்சியாக மேற்கொண்டு நீரின் தரத்தைப் பராமரிக்கலாம்.